Sep 17, 2026 - 02:33 PM

மட்டக்குளி - கந்தவுட பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்றைய தினம் புதுக்கடை 7 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவராவார்.
விபத்து சம்பவித்த நேரத்தில் குறித்த சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வத்தளை திசையிலிருந்து அதிவேகமாக வந்த குறித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.





























