Sep 19, 2026 - 04:20 PM

தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அதன் ஊழியர்கள் இருவரை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நிறுவனம் தொடர்பாக 245 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 30 மற்றும் 31 வயதுடைய கஹவத்த மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த இரு யுவதிகள் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் அந்நிறுவனத்தின் முதன்மை விற்பனை முகாமையாளராகவும், செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்களிடம் இருந்த 04 சொகுசு கார்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரையும் வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பண மோசடி சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், அவரும் வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிகான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





























