Sep 19, 2026 - 05:24 PM

கொஹுவல, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றைச் சோதனையிட்டு, 3 துப்பாக்கிகளுடன் பாதாள குழுவைச் சேர்ந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருளும் இருந்த நிலையில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், குறித்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 3 துப்பாக்கிகளுக்கு மேலதிகமாக 08 தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், இப்போதைப்பொருட்கள் திட்டமிட்ட குற்றவாளியும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'களுபோவில அவிஷ்க' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பைக் கையாளுபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அவருக்குப் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும் ஆவர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி கொஹுவல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 02 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 504 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இவர்களது நெருங்கிய கூட்டாளிகள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.





























