Header Logo
Vallibel FD
Selan Bank
மலையகம்
ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை

Aug 6, 2026 - 11:27 AM

ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை
Mobitel Inner 1278

நுவரெலியா மாவட்டம், திம்புல்ல – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டப் பகுதியில் மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை மீட்கப்பட்ட இச்சிறுத்தை, மேலதிக சிகிச்சைக்காக ரந்தெனிகலை வனஜீவராசிகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், 

சுமார் 8 வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், அதன் உடல்நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். 

ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் 4 ஆம் இலக்கப் பிரிவில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கம்பிப் பொறியில் சிறுத்தை சிக்கித் தவிப்பதை அப்பகுதியைச் சேர்ந்த நபரொருவர் அவதானித்துள்ளார். உடனடியாக அவர் தோட்ட நிர்வாகத்திற்குத் தகவல் வழங்கியதுடன், தோட்ட நிர்வாகமும் தாமதமின்றி ஹக்கல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, நேற்று (05) ஹக்கல வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

எனினும், சிறுத்தைக்குப் பாதுகாப்பான முறையில் மயக்க மருந்து செலுத்துவதற்காக வரவிருந்த கால்நடை வைத்தியர் குறித்த நேரத்தில் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அன்றைய தினம் மீட்பு நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை. 

இதன் காரணமாக, வனஜீவராசிகள் அதிகாரிகள் முழு இரவும் அப்பகுதியில் பாதுகாப்புக் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், சிறுத்தைக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தனர். 

இந்நிலையில், இன்று (06) அதிகாலை சுமார் 3.00 மணியளவில் கால்நடை வைத்தியரின் உதவியுடன் சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு, மிகுந்த அவதானத்துடன் கம்பிப் பொறியிலிருந்து விடுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆரம்பச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக ரந்தெனிகலை வனஜீவராசிகள் பராமரிப்பு நிலையத்திற்கு அது கொண்டு செல்லப்பட்டது. 

மீட்கப்பட்ட சிறுத்தையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு உட்புற பாதிப்புகள் உள்ளதா என்பது தொடர்பில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தை முழுமையாகக் குணமடைந்த பின்னர், அதனை மீண்டும் அதன் இயற்கையான வாழ்விடத்தில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, ஸ்டோனிகிளிப் மற்றும் அதனை அண்மித்த தோட்டப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகப் பல தடவைகள் தோட்ட நிர்வாகத்திற்கும், வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

மிருகங்களை வேட்டையாடுவதற்காகக் கம்பிப் பொறிகள் அமைப்பது இலங்கையின் வனஜீவராசிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் சிறுத்தைகள் உள்ளிட்ட பல அரிய வனவிலங்குகளின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகச் சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும், திம்புல்ல – பத்தனை பொலிசாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கம்பிப் பொறியை அமைத்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். மனிதர்களும் வனவிலங்குகளும் பாதுகாப்பாக இணைந்து வாழ்வதற்கு, இவ்வாறான சட்டவிரோத வேட்டையாடும் செயற்பாடுகளை முற்றிலுமாகத் தடுக்க வேண்டியது அவசியமாகும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278