Sep 18, 2026 - 05:51 PM

தோட்டப்புறப் பகுதிகளைச் சார்ந்த பாடசாலைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்குகளில் ஒன்றாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்திப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கான கற்றல்-கற்பித்தல் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது தோட்டப்புறப் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகளைக் கண்டறிந்து, தோட்டப்புற பாடசாலைகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் நோக்கில் இந்தப் பட்டறை நடத்தப்பட்டது.
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்காக புதிய திட்டங்களை ஆரம்பிப்பது, தேசிய மூலோபாய மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் மாதிரிக்கு ஏற்ப திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பது, தொழிற்கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வேலைத்திட்டங்களை கள மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகளும் கருத்துக்களும் இங்கு ஆராயப்பட்டன.
மேலும், ஆசிரியர்களுக்கான வீடுகளை அமைத்தல், 34 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைத்தல், 23 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு மதில்களை அமைத்தல் போன்ற தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக அமைச்சரவை அனுமதி பெற்றுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன், ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மாணவர் நலன்புரி போன்ற துறைகளின் அபிவிருத்தி தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக வலியுறுத்தப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒவ்வொரு துறையிலும் மலையக சமூகம் ஒரு சமூகமாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார்.
அத்துடன், தோட்டப்புறப் பகுதிகளிலிருந்து தமிழ் மொழி மூல ஆசிரியர்களை அதிகளவில் உள்வாங்குவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதால், அதற்காக அப்பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும், கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையைக் கட்டியெழுப்புவது அந்தப் பணியின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.





























