Sep 18, 2026 - 04:12 PM

தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ரயில் சேவையை முடிந்தவரை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் ரயில் தொழிற்சங்க நடவடிக்கை, குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் ரயில் சேவையை அதிகபட்ச அளவில் பேண முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வேலைநிறுத்தம் அமுலில் இருந்த நேற்று (17) ஒரு நாளில் மட்டும் 187 ரயில் பயணங்களை முன்னெடுக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் தேவி உள்ளிட்ட யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் கடுகதி ரயில் சேவைகளை இன்று (18) முன்னெடுப்பதற்கு ஊழியர்கள் அளித்த பங்களிப்பைப் பாராட்டிய பிரதி அமைச்சர், தொழிற்சங்க நடவடிக்கையிலிருந்து விலகி சேவையில் இணைந்து கொண்டவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, எவ்வித விபத்துகளுக்கும் இடமளிக்காமல் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்காக சில அதிகாரிகள் சுமார் 24 மணி நேரம் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பொதுவாக பெருமளவிலான ஊழியர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மருத்துவர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.
"இதனை சாதாரணக் கடமையாக மட்டும் கருதி முடித்துவிட முடியாது. கடினமான சூழ்நிலையிலும் பொதுச் சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகப் பொறுப்பேற்ற அதிகாரிகளும் ஊழியர்களும் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு முழு அரசாங்கத்தின் மற்றும் ரயிலில் பயணிக்கும் மக்களின் கௌரவம் உரித்தாக வேண்டும். உங்களது தளராத அர்ப்பணிப்புக்கு நன்றிகள். சவால்களுக்கு மத்தியிலும் பொதுமக்களுக்காக ரயில் சேவையைப் பாதுகாத்த உங்களுக்கு அரசாங்கத்தினதும் மக்களினதும் கௌரவம் உரித்தாகிறது." என்றார்.





























