Sep 20, 2026 - 09:10 AM

கடந்த சில மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் 103.5 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்தின் தெல்வல தேயிலைத் தோட்டப் பகுதியில் 93.5 மி.மீ. மழைவீழ்ச்சியும், குருதியபொத்த தேயிலைத் தோட்டப் பகுதியில் 87.5 மி.மீ. மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, களுத்துறை மாவட்டத்தின் நேபொட பகுதியில் 83.0 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை மற்றும் இடி மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.





























