Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம்?

Jul 17, 2026 - 11:56 PM

ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம்?
Mobitel Inner 1278

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200 இலட்சம் ரூபா பணத்தின் ஒரு பகுதி, பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 

குறித்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் அருண வருஷஹென்னதிகே ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு இன்று அழைக்கப்பட்ட போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. 

முன்வைக்கப்பட்ட விபரங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

நாட்டின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் 'ஹரக்கட்டா 'என்ற நதுன் சிந்தக' தடுப்புக் காவலில் இருந்தபோது அவருக்குச் சலுகைகளை வழங்குவதற்காக 1,200 இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹென்னதிகே ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, விசாரணை தொடர்பான மேலதிக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இலஞ்சம் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தப்பெரும, சர்சைக்குரிய இச்சம்பவம் குறித்து ஹரக்கட்டா என்ற நதுன் சிந்தகவின் மனைவியான மஹேஷிகா மதுவந்தி வழங்கிய வாக்குமூலம் தற்போது விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

"ஐயா, கடந்த வழக்குத் தவணையின் போது நான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தேன், இந்தச் சந்தேகநபர்களுக்கு இலஞ்சப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் ஹரக்கட்டா என்ற நதுன் சிந்தகவின் மனைவியான மஹேஷிகா மதுவந்தியிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பெற எதிர்பார்ப்பதாக. அதற்கமைய, மஹேஷிகா மதுவந்தி இச்சம்பவம் குறித்து தனக்குக் கூற வேண்டிய அனைத்து விபரங்களையும் குறிப்பிட்டு வழங்கிய வீடியோ வாக்குமூலம் அடங்கிய இறுவட்டு (CD) தற்போது நமக்குக் கிடைத்துள்ளது. அதேபோன்று, குறித்த இலஞ்சப் பணம் வழங்கப்பட்டதன் பின்னர் அதன் நோக்கங்கள் நிறைவேறாததால், அது குறித்து வினவி இந்தச் சந்தேகநபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசியும் தற்போது விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது." 

"இந்த இலஞ்ச விவகாரத்துடன் தொடர்புடைய ஹெர்பி என்ற நிர்மல பண்டார என்பவர் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலத்தில், முதலாவது சந்தேகநபரான சரித் அபேசிங்க இலஞ்சப் பணம் குறித்துப் பேசுவதற்காக இந்தியாவின் இருந்தே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அந்த நேரத்தில் மற்ற இரு சந்தேகநபர்களும் அவருடன் இருப்பதாக சரித் அபேசிங்க கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்." 

"அதற்கமைய, அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மூன்று சந்தேகநபர்களும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதி ஒரே விமானத்தில் இந்தியாவிற்குச் சென்று, பின்னர் மூவரும் ஒன்றாக 2023 மார்ச் 07 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் ஹெர்பி என்பவரினதும் இந்த மூன்று சந்தேகநபர்களினதும் தொலைபேசி அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்த போது, ஹெர்பி கூறும் கதை உண்மை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது." என்றார். 

இதன்போது, விசாரணையில் வெளிப்பட்ட சந்தேகநபர்களின் தொலைபேசித் தொடர்புகள் மற்றும் சந்தேகநபர்களுடன் தொடர்புகளைப் பேணிய பிக்கு ஒருவர் குறித்தும் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு விபரங்களை அறிக்கை செய்தது. 

"ஐயா, இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகப் பெயர்கள் குறிப்பிடப்பட்டவர்களுக்கு இடையே மாத்திரம் 1,300 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளமை தற்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேபோன்று, இந்த இலஞ்ச விவகாரத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன." 

"இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, இந்தச் சந்தேகநபர்களுடன் தொடர்புடைய பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குச் சென்றுள்ளதாகத் தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த பிக்கு யார் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்த விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர் அடுத்த தவனையில் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்கின்றோம்." 

"அத்துடன் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக மேலும் ஒரு இலஞ்ச விவகாரம் குறித்த முறைப்பாடு இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. அது குறித்தும் தற்போது விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது." என்றார். 

இதனையடுத்து, சந்தேகநபரான சரித் அபேசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன பிணைக் கோரிக்கையை முன்வைத்தார். 

"ஐயா, ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் 149(1) பிரிவின் கீழ் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் இலஞ்ச வழக்கின் வழக்குப் பொருளாக, இலஞ்சமாகப் பெறப்பட்ட பணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோன்று, இலஞ்சப் பணத்தைப் பெறும் போதே கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்க வேண்டும்." 

"ஆனால் இங்கு அவ்வாறான எதுவும் முன்வைக்கப்படவில்லை. அதேபோன்று இவ்வழக்கின் சாட்சியாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்களுடன் பெயர்கள் குறிப்பிடப்பட்டவர்கள். இவற்றைச் சுயாதீன சாட்சியங்களாகக் கருத முடியாது. எனது கட்சிக்காரரின் 2 1/2 வயதுடைய மூன்று இரட்டைப் பிள்ளைகளில் (Triplets) ஒரு பிள்ளை, தற்போது தந்தையைப் பார்க்காத காரணத்தினால் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த வயதுடைய மூன்று பிள்ளைகளை ஒன்றாகக் கவனிப்பது தாய்க்குப் பெரும் பிரச்சினையாக உள்ளது." 

"அத்துடன் அவருக்கு இருக்கும் இதய நோய் நிலைமைக்குத் தினசரி சிகிச்சை பெறாவிடின் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். இவ்விடயங்கள் அனைத்தையும் விசேட காரணங்களாகக் கருதி எனது கட்சிக்காரருக்குப் பிணை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." என்றார். 

அதேபோன்று, சந்தேகநபரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸவும் பிணைக் கோரிக்கையை முன்வைத்தார். 

"ஐயா, ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார், எனது கட்சிக்காரரின் தந்தையான விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சராகப் போதைப்பொருள் தொடர்பாக மேற்கொண்ட சட்டத் திருத்தங்கள் காரணமாகவே, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெருமளவானோர் வெளியில் வர முடியாமல் உள்ளே இருக்கிறார்கள் என்று. அதாவது ஐயா, அவர்கள் எனது கட்சிக்காரர் மீது வெறுப்பு கொண்டுள்ளனர். 

"எனவே இவருக்குச் சிறைச்சாலைக்குள் உயிராபத்து உள்ளது. அடுத்த விடயம் என்னவெனில், எனது கட்சிக்காரர் கடுமையான 'ஸ்லீப் அப்னியா' (Sleep Apnea) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் அவரது ஒக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த மட்டத்திற்குச் சரிவடையும். கார்பன் டை ஆக்சைடு அளவு மிக உயர்வாக அதிகரிக்கும். திடீரென சுவாசம் நின்றுவிடும். சுவாசம் நின்றால் மீண்டும் வராமல் போகக்கூடும்." 

"இதன் காரணமாக அவர் 'சிபெப்' (CPAP) இயந்திரத்தை தினசரி இரவில் பயன்படுத்துகின்றார். சிறைச்சாலைக்குள் அதனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அவருக்கு இல்லை. நீண்ட காலத்திற்குச் சிகிச்சை கிடைக்காவிடின் அவர் மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு ஆளாக நேரிடும். இந்த விசாரணை இறுதிப் பகுதிக்கு வந்துள்ளதால், இவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து மேற்கொள்வதற்கு எந்த விசாரணையும் எஞ்சியிருக்கவில்லை. எனவே இவை அனைத்தையும் விசேட காரணங்களாகக் கருதி எனது கட்சிக்காரரைப் பிணையில் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." என்றார். 

முன்வைக்கப்பட்ட அனைத்து விபரங்களையும் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபர்கள் தொடர்பான பிணைக் கோரிக்கை மீதான உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வழங்குவதற்குத் தினம் குறித்து, அதுவரை மூன்று சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278